Monday, March 30, 2015

மகாபாரதக் கதைகள் - 4 பெண்களிடம் ரகசியம் தங்கலாகாது



போரில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை, விதுரர்,தௌமியர்,யுயுத்சு ஆகியோர் தர்மர் கூறியபடிக்கு ஏற்பாடு செய்தனர்.ஆதரவற்றவர்களுக்காக தருமர் தர்ப்பணம் செய்தார்.

அப்போது குந்திதேவி அங்கு வந்தாள். அவள், தேரோட்டி மகன் என இகழப்பட்டவனும், துரியோதனனின் நம்பிக்கைக்கு ஏற்றவனாகத் திகழ்ந்தவனுமாகிய , அர்ச்சுனனால் போரில் கொல்லப்பட்ட கர்ணன் பாண்டவர்கள் ஐவருக்கும் மூத்தவன் என்றும், தனக்கு சூரியனின் அருளால் பிறந்த மகன் என்றும் கூறினாள்.

தாயின் கூற்றைக் கேட்ட பாண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டனர்.பின் தருமர் தாயினிடம் "வீரர்களில் சிறந்தவனும், ஒளிமிக்கவனுமான கர்ணன் மூத்தவன் என்ற உண்மையை மறைத்ததால் ஏற்பட்ட விளைவுகளை நீங்கள் அறிவீர்களா?" என்றார்.பாஞ்சாலர்களையும், அபிமன்யூவையும் இழந்த துக்கத்தை விட அதிக துக்கம் அடைந்துள்ளதாகக் கூறினார்.இவ்வளவு நாள் இந்த ரகசியத்தை ஏன் மறைத்தீர்கள்?என்றார்.

பின் கர்ணனின் மனைவியுடன் அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்தார் தருமர்.

பின், "இனி எந்த ரகசியமும் பெண்களிடம் தங்கலாகாது" என்றார் உள்ளக் கொதிப்புடன் '

Sunday, March 22, 2015

மகாபாரதக் கதைகள் - 3 முற்பகல் செய்யின்



நாம் யாருக்கேனும் தீங்கிழித்தோமாயின்..அதற்கான பலனை பின்னாளில் நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும்.

கர்ணன் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது,அதுவே இக்கதையாகும்.

முனிவர் ஒருவர் காட்டில் தியானம் செய்து கொண்டிருந்தார்.அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த பசுவும், கன்றும் அருகே புல்லை மேய்ந்து கொண்டிருந்த நேரத்தில், கன்றின் மீது அம்பு ஒன்று பாய்ந்தது.அக்கன்று துடிதுடித்து இறந்தது..இறக்கும் தறுவாயில் அக்கன்றின் வேதனைக் கத்தல் கேட்டு முனிவர் தியானம் கலைந்தது.

அவர், இறந்த கன்றையும், தாய்ப்பசு கண்ணீருடன் நிற்பதையும் பார்த்தார்.

அம்பு எய்தி பசுவைக் கொன்றவனைத் தேடினார். அப்போது ஒரு வீரன் கையில் வில்லுடன் அங்கு வந்தான்.அவன்தான் அம்பை எய்திருக்க வேண்டும் என முனிவர் எண்ணினார்.அவரது கோபம் அந்த வீரன் மீது சாபமாக அமைந்தது.

"சிறு கன்றின் மீது அம்பு எய்தி கொன்றவனே! உனக்கு முடிவுகாலம் வருகையில், உன் தேரில் நின்று நீ போர் புரிகையில், தேரின் சக்கரங்கள் மண்ணுக்குள் புதையும்.அந்த நேரமே உனக்கு மரண நேரமாய் அமையும் என்பதை உணர்வாயாக!" என்றார்.

அந்த வீரன் தான் கர்ணன்.

கன்றைக் கொன்ற தன் செயலால் வருந்தினான் கர்ணன்.ஆனாலும் விதியின் செயல் இது என தன்னை தேற்றிக் கொண்டான்.

அந்த முனிவர் சாபப்படியே பாரதப் போரில் கர்ணன் மரணம் நிகழ்ந்தது. .

Saturday, March 21, 2015

மகாபாரத நீதிக்கதைகள்- 2 ..கிளியின் நன்றி



பாரதப் போர் நிகழ்ந்து முடியும் நிலையில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே பல நீதிகளை தருமருக்கு எடுத்துரைத்தார்.இவை பெரும்பாலும் நீதிக்கதைகள் ஆகும்.

தருமர், நன்றி பற்றிக் கேட்க பீஷ்மர் சொல்லலானார்.

வேடன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.விஷம் தோய்ந்த அம்பு ஒன்றை விலங்கின் மீது அவன் செலுத்த அது குறிதவறி.ஒரு பெரிய ஆலமரத்தை அடிப்பாகத்தைத் தைத்தது.அம்பில் இருந்த விஷத்தினால் மரம் பட்டுப் போனது.இலைகள் உதிர்ந்து காட்சியளித்தது.மரம் பட்டுப்போனாலும், அம்மரத்தில் வாழ்ந்திருந்த கிளி ஒன்று அங்கேயே தங்கி இருந்தது.இது கண்டு இந்திரன் அங்கு வந்து கிளியைப் பார்த்து, "காட்டில் எவ்வளவோ மரங்கள் இருக்கின்றன.அங்கு செல்லாமல் பட்டுப்போன இம்மரத்திலேயே ஏன் இருக்கிறாய் " என்றான்.

கிளி சொல்லியது..

"இம்மரத்தில் தான் நான் பிறந்து,பறந்து, ஒடியாடி மகிழ்ந்து வளர்ந்தேன்.இம்மரம் பூத்துக் குலுங்கி எனக்கு, காய்களும், கனிகளையும் தந்தது.அவற்றை உண்டு நான் வளர்ந்தேன்.என் வளர்ச்சிக்கு பெரிய உதவி செய்த இம்மரத்தை விட்டு விட்டு என்னால் செல்ல முடியாது. இம்மரம் நல்ல நிலையில் இருந்த போது அதன் பலன்களை அனுபவித்த நான்..இம்மரத்திற்கு கஷ்டநிலை ஏற்பட்டபோது அதை விட்டு பிரிவது நியாயமில்லை.அது செய் நன்றி மறப்பதற்கு ஒப்பாகும்' என்றது.

கிளியின் வார்த்தைகளைக் கேட்ட வேடன் மனம் மகிழ்ந்து, கிளிக்கு வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னான்.

கிளி உடனே.."பட்டுப்போன் இம்மரம் மீண்டும் தழைக்க வேண்டும்.பசுமையோடு..காய், கனிகளுடன் இருக்க வேண்டும்" என்றது.

இந்திரனும் அது போல வரமளிக்க, ஆலமரம் மீண்டும் துளிர்த்து பசுமையுடன் காட்சி தந்த.து.

எந்த ஒரு செயலை நாம் செய்ய மறந்தாலும்...ஒருவர் நமக்குச் செய்த நன்றியை மறவாது இருப்பதுடன்..உதவி செய்தவருக்கும் நம்மாலான சேவைகளை செய்ய வேண்டும். 

Friday, March 20, 2015

மகாபாரதக் கதைகள்-1



1)தரும வியாதன்

கௌசிகன் என்னும் முனிவன் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தான்.அப்போது அவன் அமர்ந்திருந்த மரத்தின் மேலிருந்த கொக்கு ஒன்று எச்சமிட அது முனிவனின் மீது விழுந்தது.அவனது தவம் கலைய அந்தக் கோபத்தில் கொக்கை அவன் பார்க்க கொக்கு இவனது கோப நெருப்பில் வெந்து சாம்பலானது.

தன் தவம் கலைந்தாலும், தனது தவ வலைமை கொக்கை எரித்ததைக் கண்ட முனிவனுக்கு அகங்காரம் உண்டானது.பக்கத்திலிருந்த ஒரு கிராமத்திற்கு அவன் பிச்சைக்காகச் சென்றான்.

ஒரு வீட்டின் முன் நின்று"தாயே! பிச்சையிடுங்கள்" என்றான்.இப்படிக் கூவியும், வீட்டிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.அந்த வீட்டுப் பெண் அப்போது தனது கணவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.முனிவன் மீண்டும் குரல் கொடுக்க, வீட்டினுள்ளிருந்து "இதோ வருகிறேன் சற்றுப் பொறு'' என்ற குரல் கேட்டது..

பின், அந்த வீட்டிலிருந்து உணவுத் தட்டோடு வீட்டின் தலைவி வந்தாள்.தனது தவ வலைமைத் தெரியாமல் இவள் நம்மைக் காக்க வைத்து விட்டாளே என சற்றுக் கோபத்துடன் முனிவன் அவளைப் பார்த்தான். அவளோ, அவனை சட்டை செய்யாமல் "கொக்கென்று நினைத்தாயோ கொங்ககணவா?" என்றாள்.

உடனே முனிவனுக்கு ஆச்சரியம்.தன் மீது எச்சமிட்ட கொக்கை தான் எரித்தது இவளுக்கு எப்படித் தெரியும்? என வியந்தான்.அவனின் முகக்குறிப்பை உணர்ந்த அப்பெண் "முனிவரே! நீர் தவம் பற்றி தெரிந்து கொண்ட அளவிற்குத் தருமத்தைப் பற்றி அறியவில்லை.தருமம் பற்றி அறிய, மிதிலை நகர் சென்று அங்கு வாழும் தருமவியாதனிடம் போகவும்" என்றாள்.

முனிவரும், மிதிலை நகருக்குச் சென்றார் .அங்கு தருமம் பற்றி தனக்கு போதிப்பவன் ஒரு தவசியாய் இருப்பான் என எணணினார்.ஆனால், தருமவியாதனோ ஒரு கசாப்புக் கடையில் இறைச்சி வியாபாரம் செய்து வந்தான்.இவன் திகைப்பைப் பார்த்த தருமவியாதன்"தருமத்தைப் பற்றி அறிய அப்பெண் உன்னை அனுப்பினாளா? " எனக் கேட்டான்.முனிவனின் திகைப்பு இப்போது வியப்பாய் மாறியது. அப்பெண் என்னிடம் சொன்னது இவனுக்கு எப்படித் தெரிந்தது என வியந்தான்.ஆனால் முனிவனின் வியப்பிற்கு விடை தருமவியாதன் வீட்டில் கிடைத்தது.

தருமவியாதன், முனிவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவனை ஒரு பக்கமாக அமரச் செய்து விட்டு, தனது வயதான தாய் தந்தையரைக் குளிப்பாட்டி, அவர்களுக்கு உணவளித்து, ஓய்வு கொள்ள செய்து விட்டு முனிவனிடம் வந்தான்.முனிவன் அவன் சொல்ல வருவதை
க் கேட்காமல், வீட்டில் தான் விட்டு விட்டு வந்த தாய், தந்தையரைக் காண ஓடினான்.

உலகில் தவத்தினும் மேலான தருமம், தாய், தந்தையரைப் பேணுதல் என்று இதன் மூலம் அறியலாம். 

Monday, November 14, 2011

190 - முடிவுரை




இன்றுடன் "மகாபாரதம்"பதிவு முடிவடைகிறது.

.முகநூலில் தொடர்ந்து 190 அத்தியாயங்கள் வேறு ஏதும் வந்ததாகத் தெரியவில்லை.இச்சாதனையை நடத்த ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

மாகாபாரதம் உணர்த்தும் செய்திகள்..

எத்தகையோரும் சில நேரங்களில் அறிந்தோ..அறியாமலோ தவறுகள் செய்யக் கூடும்.ஆனாலும் ஒருவர் செய்யும் தவறுக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பதை தருமரின் வாழ்க்கை மூலம் அறியலாம்.'தருமம் வெற்றி பெறும்' என்பதே மகாபாரதம் சொல்லும் நீதி எனலாம்.ஆயினும் தருமத்தின் வெற்றி அவ்வளவு எளிதல்ல.இந்த உண்மையை உணர்த்தச் சான்றோர் எவ்வளவோ துன்பத்தை பொறுத்திருக்க வேண்டும்.எவ்வளவோ தியாகங்கள் செய்ய வேண்டும் என்னும் செய்திகளையும் மகாபாரதம் உணர்த்துகிறது.இன்ப துன்பங்கள் ஞானிகளை ஒன்றும் செய்ய முடியாது என்பதும் மனிதர்களை அவை ஆட்டிப்படைக்கின்றன என்பதும் மகாபாரதம் உணர்த்தும் செய்திகளாம்..

இனி என்னுரை..

எண்ணற்ற பாத்திரங்களைக் கொண்ட மகாபாரதத்தை எளிய நடையில் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில் எழுத வேண்டும் என எண்ணினேன்.கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் ..எந்ததவறும் வந்துவிடக்கூடாதே என் அபலமுறை படித்து..அவற்றை எளிமைப்படுத்தி எழுதினேன்.நண்பர் கே என் சிவராமன்,தி.முருகன் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தினால் இது, "மினியேச்சர் மகாபாரதம்" எனும் நூலாக சூரியன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டு பல பத்திரிகைகளின் பாராட்டுகளும்,படித்தோரிடம் இருந்து வாழ்த்துகளும் பெற்றேன். முகநூல் நண்பர்கள் படிக்க . 190 பகுதிகளில் எழுதியுள்ளேன்.மகாபாரதப் போருக்குப் பின் நடந்தவைகளை பலர் அறியமாட்டார்கள்.ஆகவே அதையும் எழுத வேண்டும் என எண்ணினேன்.என் பணி முடிந்தது.


நான் முதலிலேயே குறிப்பிட்டபடி..இதை நம்பியவர்களும்..சரி..நம்பாதவர்களும் சரி  இதிலுள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப ஒத்துழைப்புக் கொடுத்தமைக்கு நன்றி.

இம் மாபெரும் செயலை முடிக்க எனக்கு உறுதுணையாய்  இருந்தது..ராஜாஜி அவர்கள், வாரியார் அவர்கள்,ஸ்ரீசந்திரன் அவர்கள் எழுதியுள்ள புத்தகங்கள்.அவர்களுக்கு நன்றி.

(மகாபாரதம் முற்றும்)

Sunday, November 13, 2011

189-சுவர்க்க ஆரோஹன பருவம் (சுவர்க்கத்தில் ஏற்றம் பெறுவது)




சுவர்க்கத்திற்குச் சென்ற தருமர் கோலாகலமாய் இருந்த ஓர் இடத்தை அடைந்தார்.அங்கு துரியோதனன் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டார்.பேராசைக்காரன் இருக்கும் இடத்திற்கா வந்துவிட்டேன்...எனத்தன் தலைவிதியை நொந்து கொண்டார்."திரௌபதியை அவைக்கு இழுத்துவரச் செய்து அவமானப்படுத்தியவன் அல்லவா? இவன்.இவனை நான் காண விரும்பவில்லை.என் சகோதரர்கள் இருக்கும் இடத்திற்கே செல்ல விரும்புகிறேன்' என்றார்.

அது கேட்ட நாரதர், 'தருமா! பகையை மண்ணுலகோடு மறந்துவிட வேண்டும்.சுவர்க்கத்திற்கு வந்த பின் மண்ணுலக வாழ்வை ஏன் நினைக்கிறாய்?துரியோதனன் க்ஷத்திரியர்தம் இயல்புக்கு ஏற்ப வீரப்போர் புரிந்து இங்கு வந்து சேர்ந்துள்ளான்.இவனது மேன்மையை இங்குள்ளோர் பாராட்டுகிறார்கள் பார்' என்றார்.

நாரதரின் இந்த விளக்கத்தை ஏற்க தருமர் மறுத்துவிட்டார்.'என் சகோதரர்கள் சுவர்க்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறார்கள்?கொடை வள்ளல் கர்ணன் எங்கே? அவனையும் காண விரும்புகிறேன்.விராடனையும்,துருபதனையும், வீரப்போர் புரிந்து சுவர்க்கத்திற்கு வந்து இருக்கிறார்களே அவர்களையும் காண விரும்புகிறேன்.வீர அபிமன்யூ வைக் காண வேண்டும்' என்றார்.

முதலில் தனது சகோதரர்களைக் காண விழைந்த தருமருக்குத் தேவதூதன் ஒருவன் வழிகாட்டிச் சென்றான்.செல்லும் வழியெங்கும் துர்நாற்றம் வீசியது.எங்கும் தசையும், ரத்தமும் கலந்த சேறாகக் காணப்பட்டது.அழுகிய பிணங்கள் மீது நடந்துச் செல்ல வேண்டியிருந்தது.பிணங்களை உண்பதற்காகக் கழுகுகளும், காகங்களும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.அந்தக் கோரமான காட்சியைக் கண்டு தருமர் திடுக்கிட்டார்.தகதக என காய்ச்சப்பட்ட எண்ணெய்க் குடங்களைப் பாவிகளின் தலையில் போட்டு உடைக்கக் கண்டு உள்ளம் பதறினார்.இந்தக் கொடூர வழியில் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்.என் சகோதரர்கள் எங்குள்ளனர்? என தூதனை வினவினார்.இந்தத் துயரக் காட்சியின் கொடுமையை நான் மேலும் காண விரும்பவில்லை.திரும்பிச் சென்றுவிடலாம்' என்றார்.

அந்த நேரத்தில், 'தருமரே! இன்னும் கொஞ்ச நேரமாவது நீங்கள் இங்கு இருங்கள்.உங்களால் எங்கள் துன்ப வேதனை குறைந்திருக்கிறது.திரும்பிப் போகாதீர்கள்' என பல குரல்கள் கெஞ்சிக் கேட்டன.வியப்புற்ற தருமர்..அக்குரல்கள் பீஷ்மர்,துரோணர்,கர்ணன், பீமன்,அர்ச்சுனன்,நகுலன், சகாதேவன்,திரௌபதி ஆகியோருடைய குரல்கள் அவை என அறிந்தார்.உடன் மூர்ச்சித்தார்.சிறிது நேரம் கழித்து எழுந்து, சினம் கொண்டு தேவதூதனிடம், "நீ போய் இந்திரனிடம் கூறிவிடு.வாழ்நாளெல்லாம் தீமையே செய்துக் கொண்டிருந்த துரியோதனன் தேவ சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.ஒரு குற்றமும் செய்யாத என் சகோதரர்களும், திரௌபதியும் நரகத்தில் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்,நல்லது செய்பவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் நீதி எனில் அந்த நரக வேதனையை அனுபவிக்க நான் தயார்' என்றார்.

தேவதூதன்..தருமர் சொன்னதை இந்திரனிடம் கூற, இந்திரன் ,மற்றும் அனைத்துத் தேவர்களும் தருமர் முன் தோன்றினர்.அந்த நேரத்தில் நரகக் காட்சி மறைந்தது.தருமர் கண்ட நரகக் காட்சி வெறும் மாயை என்பதை தருமரின் தெய்வீகத் தந்தையான எமதர்மர் விளக்கினார்.நரகத்தில் சிறிது நேரம் தருமர் தங்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

அவர் தரும நெறியிலிருந்து வழுவாத வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாலும், ஒரு உண்மையில் பாதியை மறைத்துக் கூறியது அவரது நெறிக்கு மாறுபட்டது.'அசுவத்தாமன் இறந்தான்' எனத் துரோணர் நம்புமாறு செய்தது தருமர் மனசாட்சிக்கு மாறாக நடந்து கொண்ட செயலாகும்.தம் நெஞ்சு அறிந்த பொய் காரணமாக நரகத் துன்பத்தைசிறிது நேரம் அவர் உணருமாறு ஆயிற்று.

தாமே தருமரை சோதித்ததை எமதர்மர் நினைவுப் படுத்தினார்.முன்பு துவைத வனத்தில் அரணிக் கட்டையைத் தேடிய போது முதல் முறையாகவும்,நாய் வடிவத்துடன் வந்து இரண்டாம் முறையாகவும் சோதித்ததைக் கூறினார்.தற்போது இந்திரனால் தோற்றுவிக்கப்பட்ட நரகக் காட்சியிலும் தருமர் வெற்றி பெற்றார்.உண்மையில் தம் சகோதரர்களும்,திரௌபதியும் சுவர்க்கத்தில்தான் இருக்கின்றனர் என்பதனை உணர்ந்த தருமர் வான கங்கையில் நீராடினார்.மண்ணக மாந்தர்க்கு அணியாக விளங்கிய தருமர் விண்ணகம் அடைந்தார்.தேவர்கள் சூழ்ந்து நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.அவரது மனதில் இருந்த பகை உணர்ச்சி அடியோடு விலகியது.திருதராட்டிர குமாரர்களும் பாண்டவர்களும் இருக்கும் சுவர்க்கத்தை சென்றடைந்தார்.
சுவர்க்கத்தை அடைந்து சில காலம் தங்கி இன்பம் அனுபவித்த பின் சிலர் பரம்பொருளுடன் ஐக்கியமாயினர்.சிலர் தாங்கள் செய்து புண்ணிய காரியங்களுக்கு ஏற்பப் பல்வேறு தேவர்களாயினர்.

(அடுத்த பதிவுடன் மகாபாரதம் முற்று பெறுகிறது)

Thursday, November 10, 2011

188- மகாபிரஸ்தானிக பருவம் மேலுலகம் எய்தியது.




விருஷ்ணிகளின் அழிவை உணர்ந்த தருமர் தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்னும் தமது கருத்தைச் சகோதரிரிடம் தெரிவித்தார்.காலம் எல்லா உயிரினங்களையும் உரிய நேரத்தில் அழிக்கும் சக்தி வாய்ந்தது என்பதை அனைவரும் உணர்ந்தனர்.துறவு மேற்கொள்ள விழந்தனர்.எல்லோரும் தருமரின் கூற்றுக்கு அடி பணிந்தனர்.தருமர் நாட்டை விட்டுப் புறப்படும் முன் சுபத்ரையிடம் கூறினார்..'உன்னுடைய பேரனான பரீட்சித்தை அஸ்தினாபுர அசனாக நியமித்து உள்ளேன்.யாதவர்களில் எஞ்சியுள்ள வஜ்ரன் இந்திரப்பிரஸ்தத்தை ஆள்வான்.நீ எங்களுடன் துறவு மேற்கொண்டு வர வேண்டாம்.இவர்களுக்கு உதவியாக இங்கேயே இரு.குரு வம்சத்தில் எஞ்சியிருக்கும் யுயுத்சு இந்த இரண்டு அரசர்களுக்கும் பாதுகாவலாக இருப்பான்.கிருபாசாரியார் இருவருக்கும் ஆசாரியாராகத் திகழ்வார்'

இவ்வாறு நாட்டில் ஆட்சி நடக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தருமர் சுவர்க்க லோகம் அடையத் துறவு மேற்கொண்டார்.சகோதரர்களும்,திரௌபதியும் மரவுரி தரித்துத் தருமரைத் தொடர்ந்து சென்றனர்.அவரை பிரிய மனம் இல்லாத மக்கலும் நெடுந் தொலைவு தொடர்ந்து சென்று பின் திரும்பினர்.

பாண்டவர்களும், திரௌபதியும் உண்ணா நோன்பு மேற்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்றனர்.புண்ணிய நதிகளில் நீராடினர்.புனிதத் தலங்களைத் தரிசித்தனர்.முதலில் தருமரும்,அவருக்குப் பின் பீமனும்,பின்னால் அர்ச்சுனனும்,அவனுக்குப் பின் நகுல, சகாதேவனும் சென்றனர்.அவர்களைத் தொடர்ந்து திரௌபதியும் சென்றாள்.நாய் ஒன்று அவர்களைத் தொடர்ந்து சென்றது.அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லையும் அம்பறாத் துணிகளையும் விடமுடியாதவனாகச் சுமந்து சென்றான்.

அவர்கள் கடற்கரையை அடைந்த போது, அக்கினி தேவன் தோன்றி,'முன்னர் நான் காண்டவ வனத்தை எரிப்பதற்கு காண்டீபம் என்னும் வில்லையும் இரண்டு அம்பறாத் துணிகளையும் வருணனிடம் இருந்து பெற்று அர்ச்சுனனுக்கு அளித்தேன்.அந்தக் காரியம் நிறைவேறியதோடு வேறு அரிய செயல்களையும் அவற்றைக் கொண்டு நிறைவேற்றினான்.இனி அவற்றால் பயனில்லை.எனவே அவற்றை வருணனிடமே ஒப்படைத்து விடுக' என்று கூறி மறைந்தான். அவ்வாறே அவை கடலில் இடப்பட்டன.

பிறகு பாண்டவர்கள் பூமியை வலம் வருபவரைப் போலத் தெற்கு நோக்கிச் சென்றனர். பின் தென்மேற்காய்ச் சென்றனர்.பின் வடக்கு நோக்கிச் சென்றனர்.இமயமலையைக் கண்டனர்.அதனையும் கடந்து சென்று மலைகளில் சிறந்த மேரு மலையைத் தரிசித்தனர்.சுவர்க்கத்தை நோக்கி அவர்கள் பயணம் தொடர்ந்த போது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.

அதிர்ச்சி அடைந்த பீமன், 'இந்த தெய்வமகள் ஏன் இப்படி வீழ்ந்து விட்டாள்?'என வினவினான்.அதற்கு தருமர்,'ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் மிகவும் பிரியமாக இருந்தாள்.அதனால் இந்த நிலை ஏற்பட்டது' என்று பதிலுரைத்தார்.பின்னர் திரும்பிக்கூட பார்க்காமல் போய்க்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான்...'அண்ணா சகாதேவனின் இந்நிலைக்கு என்ன காரணம்?' என்றான்.'தன்னிடம் உள்ள சாத்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற ஞானச்செருக்குக் காரணமாக அவனுக்கு இக்கதி ஏற்பட்டது' என்றபடியே தருமர் போய்க்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான்.'தன்னைவிட அழகில் சிறந்தவர் யாருமில்லை என்ற அழகுச் செருக்குக் காரணமாகாவன் அப்படி வீழ நேரிட்டது' என்று திரும்பிப் பாராமல் தருமர் விரைந்தார்.அடுத்து அர்ச்சுனன் வீழ்ந்தி இறந்தான்.அதற்கு 'தான் ஒருவனே பகைவரை வெல்ல முடியும் என்ற வீரச் செருக்கே அவனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது' என்றவாறே தருமர் போய்க் கொண்டிருந்தார்.

பீமனுக்கும் தலை சுற்றியது, 'அண்ணா, இதற்கு என்ன காரணம்?' என்றான் பீமன்.'தன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் வலிமைச் செருக்குதான் காரணம்'என தருமர் சொல்லி முடிப்பதற்குள்பீமன் உயிர் நீத்தான்.

தருமர் போய்க்கொண்டே இருந்தார்.நாய் மட்டும் அவரைத் தொடர்ந்தது.உயிருக்கு உயிரான அனைவரும் மாண்டபோது தருமர் ஏன் மனக் கலக்கமோ..துயரோ அடையவில்லை? காரணம் அவர் துறவு மேற்கொண்ட போதே பந்த பாசங்கள் மறைந்தன.அவர் எந்த பரபரப்பும் அன்றி போய்க்கொண்டிருந்தார்.

அப்போது அவரை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்து அழைத்தான்.'என் சகோதரர்களும்,திரௌபதியும் இல்லாமல் நான் மட்டும் வர மாட்டேன்' என தருமர் பதில் உரைத்த போது நாய் விமானத்தில் ஏற முற்பட்டது.அப்போது இந்த நாய்க்குச் சுவர்க்கத்தில் இடமில்லை' என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

தருமர், 'என்னிடம் அடைக்கலம் அடைந்த நாயை விட்டு நான் ஒரு போதும் வர மாட்டேன்.இது நான் மேற்கொண்ட விரதம்' என்றார்.

அப்போது நாய் தன் வடிவத்தை மாற்ரிக்கொண்டு தர்மதேவதையாகக் காட்சியளித்தது."தரும நெறியிலிருந்து பிறழாத உன்னை நான் பாராட்டுகிறேன்.தருமத்தை நீ எந்த அளவு காக்கிறாய் என்பதைக் கண்டறிய முன்பும் நான் நச்சுப் பொய்கையில் சோதித்தேன்.உடன் பிறப்புகளுக்கும், மாற்றாந்தாய் மக்களுக்கும் இடையே வேறுபாடு ஏதும் கருதாத உனது தரும வேட்கையை அன்றும் அறிந்தேன்.இப்பொழு நாயின் மீது கொண்ட கருணையுள்ளத்தால் இந்திரன் தேரில் ஏற மறுத்தது கண்டு பாராட்டுகிறேன்' என்று கூறி நாயாக வந்த தருமதேவதை மறைந்தது.

இந்த அற்புதத்தைக் கண்ட தேவர்கள் வியப்படைந்தனர்.தருமர் ரதத்தில் ஏறிச் சுவர்க்கலோகம் சென்றார்.அங்கு நாரதர் அவரை வரவேற்றுப் பாராட்டினார்.'நல்லொழுக்கத்தை விரதமாகக் கொண்டு வாழ்ந்த புண்ணிய பலத்தினால் நீ உடலோடு இந்த சுவர்க்கத்திற்கு வந்துள்ளாய்.உன்னைத் தவிர இத்தகைய நற்பேறு பெற்றவன் உலகில் வேறு யாருமில்லை' என்று மேலும் புகழ்ந்தார் நாரதர்.

நாரதரின் இப்பாராட்டு தருமர் காதுகளில் விழவில்லை.அவரது கண்கள் அவரது சகோதரர்களையும், திரௌபதியையும் தேடியது.ஆனால் அவர்களைக் காண இயலவில்லை.

(மகாபிரஸ்தானிக பருவம் முற்றிற்று)